கற்பித்தானா?
Posted on February 22, 2012 by என். சொக்கன்
கல்லைத்தான் மண்ணைத்தான்
….காய்ச்சித்தான்
குடிக்கத்தான்
கற்பித்தானா?
இல்லைத்தான்
பொன்னைத்தான்
….எனக்குத்தான்
கொடுத்துத்தான்
இரட்சித்தானா?
அல்லைத்தான்
சொல்லித்தான்
….ஆரைத்தான் நோவத்தான்
அச்சோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான்
பதுமத்தான்
….புவியில்தான் பண்ணினானே!
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: இராமச்சந்திரக்
கவிராயர்
சூழல்: வறுமையில் வாடும்
ஒரு புலவர். தன்னுடைய
நிலைமையை எண்ணி வருந்திப்
பாடுகிறார்
தாமரைப் பூவில் வாசம்
செய்யும் பிரம்மா, என்னைப்
படைத்தபோதே கையில்
கொஞ்சம் தங்கத்தைக்
கொடுத்துக்
காப்பாற்றியிருக்கவேண்டும்,
இல்லாவிட்டால், கல்லையும்
மண்ணையும் காய்ச்சிக்
குடிக்கச்
சொல்லித்தந்திருக்கவேண்டும்.
அந்தக் கடவுள் இந்த
இரண்டையும் செய்யாததால்
நான் படுகின்ற துன்பத்தை
எங்கே சொல்லி நோவது? இப்படி
எல்லாரிடமும் பல்லைக்
காண்பித்துப் பிழைக்கும்
வாழ்க்கையாகிவிட்டதே!
துக்கடா
உரையைவிடப் பாட்டுதான்
நன்றாகக் களை கட்டுகிறது.
இல்லையா?